கத்திரிக்காய் என்றால் சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என்று ஒரே மாதிரி செய்யாமல் ஒரு மாறுதலுக்கு கத்திரிக்காய் பிரியாணி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், கத்திரிக்காயை வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் சமைத்து, சுவைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரிசி - 2 கப்
- கத்திரிக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - 4
- தக்காளி - கால் கிலோ
- பச்சை மிளகாய் - 5
- தயிர் - 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- தேங்காய்பால் - 1/2 கப்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 1
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
- தனியாத் தூள் - 3 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 50 கிராம்
- முந்திரி - 10 கிராம்
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - 50 கிராம்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் (நீளவாக்கில் நறுக்கவும்) போட்டு நன்கு வதக்கவும். கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், தேங்காய்பால் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.
4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுக்கவும்) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.
0 Comments